அமெரிக்காவில் ராகுல் காந்தி இந்தியாவின் எதிரி போன்று பேசி வருவதாகவும், அவருடைய இந்த நாடகத்துக்கான பலனை அவர் அனுபவிப்பார் எனவும் பாஜக விமர்சித்துள்ளது.
ராகுல் காந்தி 6 நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், அவர் தலைமையிலான மத்திய அரசு குறித்தும் பேசியுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் ராகுல் காந்தி இந்தியாவின் எதிரி போன்று பேசி வருவதாகவும், அவருடைய இந்த நாடகத்துக்கான பலனை அவர் அனுபவிப்பார் எனவும் பாஜக விமர்சித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: தவறாக நடந்துகொண்டார்: பிரிஜ் பூஷணுக்கு எதிரான 2 எஃப்ஐஆர்
ராகுல் காந்தி குறித்து ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியதாவது: ராகுல் காந்தி பேசுவதைப் பார்க்கும் போது அவர் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பேசுவது போல் இல்லை. அவர் இந்தியாவின் எதிரி சக்திகள் போன்று பேசி வருகிறார். எதிரிகள் மட்டும்தான் அந்நிய மண்ணில் இதுபோன்ற கருத்துகளை கூறி வருவார்கள். இதனையே தற்போது ராகுல் காந்தி செய்து வருகிறார். அவரது இந்த நாடகத்தை இந்தியா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ராகுல் காந்தியின் இந்த செயல்களுக்கான விலையினை அவர் கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
முன்னதாக ராகுல் காந்தி, ஆளும் பாஜக அரசு மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாட்டின் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் அரசியலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தி வருவதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.