இந்தியா

ஒடிசா: 3 ரயில்கள் மோதி விபத்து! அதிர்ச்சி தகவல்

2nd Jun 2023 11:18 PM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக அம்மாநில தலைமை செயலர் பிரதீப் ஜெனா அறிவித்துள்ளார். 

பயணிகள் ரயிலான பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவி ரயில், ஆகியவை சரக்கு ரயில் உடன் மோதி விபத்துக்குள்ளானதாக அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில் விபத்து நேரிட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில், 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ரயில்கள் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டு பயணிகள் சிக்கியுள்ளனர்.  இரவுநேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 

ஒடிசாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில பேரிடர் மீட்புப் படையினருடனும் உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

முன்பு இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

உதவி எண்கள்:

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாடு அறை எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 

அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா): 91 6782262286, (சென்னை) 044-25330952, 044-25330953, 25354771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவி ரயிலில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பயணிகள், ரயிலில் பயணித்த மற்ற பயணிகள் விவரங்கள் குறித்த தகவல்களுக்கு இந்த அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அவசர உதவி மையத்தை அணுகி வேண்டிய தகவல்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா விரைகிறார் உதயநிதி

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்து நடைபெற்ற இடத்துக்கு நாளை (ஜூன் 3) விரைகிறார். கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தயார் நிலையில் 3 மருத்துவமனை

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், சென்னையில் 3 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT