2022-23ஆம் நிதியாண்டில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே மதிப்பிடப்பட்டபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
முந்தைய நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.71 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது.
தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் செலவினத்துக்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமே நிதிப் பற்றாக்குறையாகும்.
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் அரசின் வருவாய்-செலவின விவரங்கள் சிஜிஏ தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2022-23-இல் மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வருவாய் ரூ.24.56 லட்சம் கோடியாகும். இதில், வரி வருவாய் ரூ.20.97 லட்சம் கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.2.86 லட்சம் கோடி, கடன் அல்லாத மூலதன வருவாய் ரூ.72,187 கோடி.
மேற்கண்ட நிதியாண்டில், வரிப் பகிா்வு மூலம் மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.9.48 லட்சம் கோடி வழங்கியுள்ளது. முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், இது ரூ.50,015 கோடி அதிகமாகும்.
2022-23-இல் மத்திய அரசின் மொத்தச் செலவினம் ரூ.41.89 லட்சம் கோடி. இதில், ரூ.34.52 லட்சம் கோடி வருவாய் செலவினம். ரூ.7.36 லட்சம் கோடி மூலதனச் செலவினமாகும். நிதிப் பற்றாக்குறை ரூ.17.33 லட்சம் கோடியாகும். ஜிடிபி-யில் இது 6.4 சதவீதம் என்று சிஜிஏ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 5.9 சதவீதமாக குறைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.