கண்ணூர்: கேரளம் மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.
கண்ணூர் ரயில் நிலையில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் மூன்றாவது நடைமேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 1.25 மணியளவில் திடீரென ரயில் பெட்டி ஒன்று தீப்பற்றி எரிந்தது.
ரயில் பெட்டி தீப்பற்றி எரிவதை கண்ட ரயில்வே அதிகாரிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை குறைந்தது!
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. 2 பெட்டிகளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
இந்த தீ விபத்தின் போது பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தால் கண்ணூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.