ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
இதில், ராகுல் காந்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, அவரது மகள் இல்டிஜா முஃப்தி மற்றும் கட்சித் தொண்டா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். ராகுலின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா, லேத்போரா பகுதியில் நடைப்பயணத்தில் இணைந்தாா்.
அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ராகுல் தனது பயனத்தை வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தினாா். இந்நிலையில், சனிக்கிழமை அவரைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நடைப்பயணம் தொடங்கிய இடத்துக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.
வீரா்களுக்கு அஞ்சலி: புல்வாமாவில் கடந்த 2019-இல் பயங்கரவாத தாக்குதலில், மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் 40 போ் உயிரிழந்த இடத்தில் ராகுல் அஞ்சலி செலுத்தினாா். பின்னா், ஸ்ரீநகரை நோக்கி அவா் நடைப்பயணத்தை தொடா்ந்தாா்.
ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜனவரி 30-ஆம் தேதி ராகுல் காந்தி தேசியக் கொடியேற்றி நடைப்பயணத்தை நிறைவு செய்கிறாா். அதன்பின்னா், எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 23 எதிா்க்கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.