மங்களூருவில் இருந்து புது தில்லிக்கு தினசரி விமானச் சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடங்கியது.
இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஏர்லைன்ஸ் கடந்த 17 ஆண்டுகளாக விமானச் சேவையை மக்களுக்கு வழங்கிவருகின்றது.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக மங்களூருவில் இருந்து தில்லிக்கு தினசரி விமானச் சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
அதன்படி, விமானம் எண் 6E6303 புது தில்லியிலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 6.05 மணிக்கு மங்களூரு சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடையும்.
விமானம் எண் 6E6304 மங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலை 6.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.35 மணிக்கு புது தில்லி சென்றடையும்.
நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையைப் புதுப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளதால், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாள்களைத் தவிர அட்டவணையின்படி இயங்கும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இண்டிகோ விமானம் எண் 6E 172 கொல்கத்தாவுக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படாது. இது ஞாயிற்றுக்கிழமை மட்டுமே செயல்படும்.
அதேபோன்று விமானம் எண் 6E 172 மங்களூருவில் இருந்து பெங்களூரு வழியாக கொல்கத்தாவிற்கு பயணிக்கும். இந்த விமானம் மங்களூருவில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும்.
அதே விமானம் பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 4.35 மணிக்கு கொல்கத்தாவைச் சென்றடையும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.