மகாராஷ்டிரத்தின் நாந்தேட் மாவட்டத்தில் மருத்துவ மாணவியின் கழுத்தை நெரித்து, தீ வைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாந்தேட் மாவட்டத்தின், பிம்ப்ரி மஹிபால் கிராமத்தில் ஜனவரி 22-ம் தேதி இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சுபாங்கி ஜோக்தந்த் வயது 22. இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
மருத்துவ மாணவிக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தனது குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரிடம் தான் வேறொருவரைக் காதலிப்பதாக மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடைபெறவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. பெண்ணின் வீட்டார் பெரும் துயரத்தில் ஆழ்ந்த நிலையில், மகளை கொன்றுவிட வேண்டும் என்று குடும்பத்தார் முடிவு செய்தனர்.
இந்நிலையில், பெண்ணின் தந்தை, சகோதரர், குடும்ப உறவினர்கள் இணைந்து ஜனவரி 22ம் தேதியன்று இரவு மருத்துவ மாணவியை அருகில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் சென்று, கயிற்றின் மூலம் கழுத்தை நெரித்துக் கொன்று, தீ வைத்து எரித்துள்ளனர்.
கொலை செய்த அடையாளங்களை மறைக்க எரிந்த உடலை அருகில் உள்ள ஓடையில் வீசியுள்ளனர்.
உடலின் பாகங்கள் சிக்கிய நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தந்தை, சகோதரன் உறவினர் ஆகியோர் இணைந்து மருத்துவ மாணவியை கொன்றது அம்பலமாகியது.
குற்றம் சாட்டப்பட்ட5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.