பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச், குற்றம்சாட்டியிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரும், இந்திய தொழிலதிபருமான கௌதம் அதானி தலைமையிலான கௌதம் அதானியின் குழுமத்தின் நிகர மதிப்பு புதன்கிழமையன்று 6 பில்லியன் டாலர்கள் சரிந்த நிலையில், இன்றும் கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இதையும் படிக்க.. லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
அதானி என்டர்பிரைசஸ், அதானி பசுமை எரிசக்தி, அதானி துறைமுகம், அதானி எரிசக்தி, அதானி ஒட்டுமொத்த எரிவாயு என அதன் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இறங்குமுகமாகவே உள்ளன.
ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிக்க.. மோடியால் தங்கிக் கொள்ள முடியுமா? சுப்ரமணியன் சுவாமி டிவீட்
கடந்த 2 ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்ட ஆழமான ஆய்வுக்குப் பிறகே அந்த அறிக்கை வெளியிடப்படுவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் கூறியது.
அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு புதன்கிழமை வீழ்ச்சியடைந்தது. ரூ.20,000 கோடி மதிப்பிலான அந்தக் குழும பங்குகளை முதலீட்டாளா்கள் விற்பனை செய்தனா்.
அதானியின் குற்றச்சாட்டு..
மோசடிப் புகார் குறித்து அதானி குழுமத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிக்க.. ஷ்ரத்தாவைக் கொன்றுவிட்டு அஃப்தாப் செய்த துணிச்சலான செயல்
இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமத்தின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்து ட்விட்டரில் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தெரிவித்ததாவது:
எங்களது அறிக்கையில் முடிவில் அதானி குழுமத்துக்கு 88 நேரடி கேள்விகளை எழுப்பியிருந்தோம். ஆனால், 36 மணி நேரமாகியும் அதில் ஒரு கேள்விக்குக் கூட பதில் வரவில்லை.
இது தொடா்பாக எங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டிலிருந்து துளியும் பின்வாங்கப் போவதில்லை.
எங்களது ஆய்வறிக்கையை சட்டரீதியில் எதிா்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம்.
இதையும் படிக்க.. அதானி குழும மோசடி - 88 கேள்விகளுக்கு எந்த பதிலுமில்லை : ஹிண்டர்பர்க் நிறுவனம் எதிர்வினை
அவ்வாறு தொடா்ந்தால், சட்டப்பூா்வ ஆய்வுக்காக நாங்கள் அதானி குழுமத்தின் ஏராளமான முக்கிய ஆவணங்களைத் தருமாறு நீதிமன்றத்தில் கேட்போம்.
நாங்கள் போதிய அளவில் ஆய்வு செய்யாமல் அந்த ஆய்வை வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் கூறுவது தவறு. 2 ஆண்டுகளாகத் தொடா்ந்து ஆய்வு செய்து, பல்வேறு தகவல்களைத் திரட்டி உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகே எங்களது ஆய்வறிக்கையை வெளியிட்டோம் என்று ட்விட்டரில் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தெரிவித்திருந்தது.