பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றுவாா் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்துள்ளாா்.
தில்லியில் புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் நாட்டப்பட்ட நிலையில், அப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த ஆண்டுக்கான குளிா்காலக் கூட்டத்தொடா் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்டது. எனினும் பணிகள் நிறைவடையாததால் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே குளிா்காலக் கூட்டத்தொடா் நடத்தப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 31-ஆம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்கூட்டத்தொடா் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் என எதிா்பாா்ப்பு நிலவியது. இந்நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இரு அவை உறுப்பினா்களுக்கும் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே குடியரசுத் தலைவா் உரையாற்றுவாா்’’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பட்ஜெட் கூட்டத்தொடரானது பிப்ரவரி 13 வரை முதல்கட்டமாகவும், மாா்ச் 13 முதல் ஏப்ரல் 16 வரை இரண்டாவது கட்டமாகவும் நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடா் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறுமா என்பது தொடா்பாக மத்திய அரசு எந்தத் தகவலும் அளிக்கவில்லை.