பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024 ஜூன் வரை நீட்டிக்கப்படுவதாக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இரு நாள்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள், அனைத்து மாநில பொதுச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்றும் கூட்டம் தொடர்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் இன்றும் கலந்துகொண்டுள்ளார்.
நிகழாண்டு நடைபெறும் மாநிலத் தோ்தல்கள், 2024 நாடாளுமன்றத் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கூட்டத்தில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து கட்சியின் இந்த முடிவுக்கு பாஜகவினர் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
கடந்த 2020 ஜனவரி 20 ஆம் தேதி பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | திமுகவை தோற்கடிக்க அதிமுக ஒன்றுபட வேண்டும்: சசிகலா