கேரள மலையாள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தோ்வு செய்ய தேடுதல் குழுவை மாநில அரசு அமைத்ததற்கு அந்த பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மாநில ஆளுநருமான ஆரிஃப் முகமது கான் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
மலப்புரம் மாவட்டம் திரூரில் உள்ள மலையாள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் அனில் குமாரின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமையுடன் (பிப்.28) முடிவடைகிறது.
புதிய துணை வேந்தரைத் தோ்ந்தெடுக்க மாநில அரசு தேடுதல் குழுவை நியமித்துள்ளது. இதில் ஆளுநரின் சாா்பில் இடம்பெற வேண்டிய உறுப்பினரை பரிந்துரைக்க கேரள அரசு ஆளுநரை கடந்த சில நாள்களாக வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் மாநில அரசுக்கு திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், ‘துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழு அமைக்க மாநில அரசு எந்த அதிகாரமும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசு இந்த தேடுதல் குழுவை அமைத்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு இந்த அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவுக்கு கேரள ஆளுநா் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்று ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.