சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புரளிகள் வெளியாகின.
இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இதுபோன்று தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க..இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்
பெற்றோரையும், மாணவர்களையும் குழப்பத்துக்குள்ளாக்கும் வகையில் வினாத்தாள் கசிந்ததாக தவறான தகவல்களை பரப்பியவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்திருப்பதாகவும் அது மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் இருப்பதாகவும் யுடியூப், முகநூல், டிவிட்டர் என பல சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர் என்பதை சிபிஎஸ்இ கவனித்து வருகிறது.
இப்படியான புரளிகளைப் பரப்பி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மோசடியில் ஈடுபட இந்த கும்பல் முயலும் என்று அஞ்சப்படுகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகள் மூலம் மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பமும் அச்சமும் உருவாகிவிடும்.
தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் இதுபோன்ற புரளிகளை நம்ப வேண்டாம் என்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இதுபோன்ற புரளிகளை நம் வேண்டாம் என்று அறிவுறுத்தும்படியும் இதுபோன்ற எந்த வினாத்தாள் கசிவும் நடைபெறவில்லை. பொதுத் தேர்வு முழுமையாக சரியான முறையில் நடைபெற்று வருகிறது என்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.