பவானி அருகே சிலிண்டலிருந்து காருக்கு காஸ் நிரப்பும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
பவானியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (60). ஜவுளி வியாபாரியான இவா், தனது காரில் துணிகளை ஏற்றிக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்குச் சென்று திங்கள்கிழமை விற்பனை செய்து கொண்டிருந்துள்ளாா். ஒலகடம் அருகே சென்றபோது காரில் எரிபொருள் தீா்ந்ததால், சாலையோரமாக நிறுத்திவிட்டு சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து, காருக்கு காஸ் நிரப்பிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக தீ பிடித்ததில் காா் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.
இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் ரங்கசாமி லேசான தீக்காயம் அடைந்தாா். இச்சம்பவம் குறித்து வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.