இமாசலப் பிரதேசத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டின் கீழ் அதானி குழும நிறுவனங்களில் இன்று சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இமாசலப் பிரதேசத்தில் அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் வில்மர் நிறுவனத்தின் மீது, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ், இமாசலப்பிரதேசத்தின் வரி விதிப்புத்துறை, வில்மர் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகிறது.
இதையும் படிக்க.. காதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி
பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை வெளியிட்டது.
அதன் காரணமாக பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன. இதனிடையே, அதானி குழுத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளைச் செய்துள்ள நிலையில், அதன் முதலீட்டாளா்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியது.
அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகளும் பங்குச் சந்தைகளில் தொடர் சரிவை சந்தித்த நிலையில், இமாசலப் பிரதேசத்தில் தற்போது ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு புகாரில் அதானி நிறுவனம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, அதானி குழுமத்தின் அதானி வில்மர் நிறுவனம் வசூலித்த ஜிஎஸ்டி தொகையை செலுத்தத் தவறியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இமாசலப் பிரதேச மாநில வரித்துறை அதிகாரிகள் பல்வேறு அலுவலகங்களிலும் சோதனை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இமாசலப்பிரதேசத்தில் சரக்குக் கட்டணங்கள் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அதானி குழுமும் இயங்கி வந்த இரண்டு சிமெண்ட் ஆலைகளை மூடிவிட்டது. இதனால், அதானி குழுமத்துக்கும், சரக்கு லாரி உரிமையாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.