புது தில்லி: எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரியிறைத்தாலும் தாமரை மலரும் என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் பொன்னான நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்து வருகின்றன என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் உரையாற்றி வருகிறார்.
அவரது உரையில், கடந்த 3 ஆண்டுகளில் 11 கோடி வீடுகளுக்கு நேரடியாக குடிநீரை கொண்டு சேர்த்திருக்கிறோம். ஆனால், 2014 வரை வெறும் 3 கோடி வீடுகளில்தான் குடிநீர் இணைப்பு இருந்தது. நாடாளுமன்றத்தில் சில எம்.பி.க்களின் செயல்பாடுகளும் அவர்கள் பயன்படுத்தும் மொழியும் வேதனையைத் தருகிறது. நாட்டின் பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வுகளை கண்டு வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதையும் படிக்க.. காதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி
மேலும், 2014ஆம் ஆண்டு வரை நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்திருக்கவில்லை. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 48 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் மூலம் முறைகேடு தடுக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சமையல் எரிவாயு உருளை இணைப்புகளின் எண்ணிக்கை 14 கோடியிலிருந்து 32 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எப்போதும் பெயரளவில்தான் செயல்படும். நாட்டின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முற்பட்டதில்லை என்றும் பிரதமர் கூறினார்.