புதுதில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலின் போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி செலுத்தும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றம் வந்த போது பிளாஸ்டிக்கிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட நீல நிற ஆடையை அணிந்து வந்தார்.
கடந்த திங்கள்கிழமையன்று பெங்களூரில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரத்தின்போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 'அன்பாட்டில்ட்' முயற்சியின் கீழ் சீருடைகளை வெளியிட்டபோது அதிகாரிகள் இந்த ஜாக்கெட்டை பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்தனர்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பிற்கு இணங்க, மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் மற்றும் பருத்தியால் நெய்யப்பட்ட ஆடையை சில்லறை வாடிக்கையாளர் உதவியாளர்கள் மற்றும் எல்பிஜி விநியோக பணியாளர்களுக்கு சீருடைகளாக ஐஓசி ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் மோடியின் சமீபத்திய பாணியை வாழ்த்துவதற்காக டிவிட்டரில் இணைந்தனர். இது காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான ஒரு புதுமையான வழி என்று அதில் பதிவு செய்தனர். அதே வேளையில் காலநிலை விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழி இது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.
மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்ததற்காக பிரதமருக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நன்றி தெரிவித்து கொண்டார்.
அதே வேளையில் அதிகாரிகளின் கூற்றுப்படி ஐஓசியின் பணியாளர்களின் ஒவ்வொரு சீருடையும் செய்ய சுமார் 28 பயன்படுத்தப்பட்ட பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய இது உதவும் என்றனர்.
முக்கியமாக, ஐஓசி எண்ணெய் நிறுவனமானது மற்ற எண்ணெய் நிறுவனங்களின் பணியாளர்களுக்கான சீருடை, ராணுவத்தினர் மற்றும் பிறதுறை சார்ந்த நிறுவனங்களுக்கான சீருடைகள் மற்றும் ஆடைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது என்றார்.
மேலும், 'அனைவருக்கும் இது ஒரு வாழ்க்கைப் பாடம்' என்று சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாஜக தலைவர் ராஜ்யவர்தன் ரத்தோர் அத்தகைய ஜாக்கெட்டை அணிவதன் மூலம் சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை முறை நிலையானது மட்டுமல்லாமல் நாகரீகமானது என்பதை மோடி உணர்த்தியுள்ளார் என்றார்.