பிரதமர் மோடி அதானியை பாதுகாக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி உரையை முடித்த பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பிரதமரின் உரை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவரது உரையில் அதானி குழுமத்தின் மீதான விசாரணை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஹிண்டன்பர்க் அறிக்கையின் பின்னணியில், பிரதமர் கௌதம் அதானி பாதுகாக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
கௌதம் அதானியுடன் பிரதமர் மோடி நட்பு கொள்ளவில்லை என்றால், ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, கௌதம் அதானியின் வணிகங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டிருப்பார் என்றும் அவர் கூறினார்.
மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரையில், பழங்குடியின சமூகத்தின் பெருமையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உயர்த்தியுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரால், இன்று பழங்குடியின சமூகத்தின் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அவருக்கு இந்த நாடும், மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதையும் படிக்க: இடிபாடுகளுக்கு அடியில் இருக்கும் சகோதரனைப் பாதுகாத்த 7 வயது சிறுமி!
குடியரசுத் தலைவர் தனது தொலைநோக்கு உரையின்மூலம் எங்களையும் கோடானுகோடி மக்களையும் வழிநடத்துகிறார். குடியரசுத் தலைவராக அவர் பதவி வகிப்பது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது மற்றும் நம் நாட்டின் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என்றார்.