கரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.
இந்தியாவின் ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்சில் உள்ள டென்ட் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் ரெட்டி உரையாற்றும் போது இதைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
சுற்றுலாத் துறையை மிஷன் முறையில் டிஜிட்டல் மயமாக்குவதை உறுதி செய்வதற்காக தேசிய சுற்றுலாத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
கரோனா தொற்றுநோய்களின்போது உலகம் மிகக் கடினமான காலங்களை எதிர்கொண்டது. குறிப்பாக சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டில் 2022-ல் கிட்டத்தட்ட 6.9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இது இந்தியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு சுற்றுலாத்துறையில் நெகிழ்ச்சியான வளர்ச்சியை அடைவதற்கான எங்கள் முயற்சிகள் சரியான திசையில் முன்னேறி வருவதாக அவர் கூறினார்.