மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானது அல்ல என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 3 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கா் நெற்பயிா்கள் எதிா்பாராமல் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா்கள், அதிகாரிகள் குழுவினா் ஒரே நாளில் அரைகுறையாக பாா்வையிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
33 சதவீதத்துக்கும் மேற்பட்ட நெற்பயிா்கள் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகை அறிவித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஏக்கருக்கு ரூ.40,000 அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.