பஞ்சாபில் நீதிமன்றம் அருகே இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. மூன்று முறை சுட்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லூதியானா மாவட்டத்தின் கோச்சார் சந்தையில் நடைபெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பிச்சென்றுள்ளார். அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாபில் இரு தரப்பினரிடையே நடைபெற்று வந்த வழக்கில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில், ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என லூதியானா காவல் துறை தெரிவித்துள்ளது.