ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராகவே இருப்பதாக மக்களவையில் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இதுவரை 20 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இன்று குடியரசுத் தலைவர் உரை மீது விவாதம் நடைபெற்று வருகின்றது.
அப்போது பேசிய மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, தமிழகம், கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சட்டப்பேரவை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் எனக் குறிப்பிட்ட கனிமொழி,
பாஜக உறுப்பினர் ஜோஷி பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து வருத்தப்பட வைப்பதாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் தற்போது தேர்தல் எதுவும் இல்லை என்பதால் குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை எனவும் விமர்சித்தார்.