புது தில்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், பிரதமர் நரேந்திர மோடியின் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆனது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று பேசுகையில், நாட்டிற்காக செய்யப்படும் எந்த வேலையையும் பெரியது அல்லது சிறியது என்று முத்திரை குத்த முடியாது.
“மக்கள் எந்த வகையான வேலையைச் செய்தாலும் அதை மதிக்க வேண்டும். நாட்டில் வேலையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உழைப்புக்கான கண்ணியம் இல்லாதது. மேலும், மக்கள் தங்கள் இயல்புகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து வகையான வேலைகளையும் மதிக்க வேண்டும். அதாவது உழைப்புக்கு உடல் உழைப்போ அல்லது அறிவுத்திறனோ, கடின உழைப்பு அல்லது மென் திறன்கள் தேவையோ அனைத்தையும் மதிக்க வேண்டும்," என்றார்.
மேலும், “எல்லோரும் வேலையின் பின்னால் ஓடுகிறார்கள். அரசாங்க வேலைகள் 10 சதவிகிதம் மட்டுமே, மற்ற வேலைகள் 20 சதவிகிதம். உலகில் எந்த அரசாங்கமும் 30 சதவீதத்துக்கு மேல் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது'' என்றார்.
மோகன் பாகவத் பேச்சுக்கு திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான கபில் சிபல், "அரசு வேலைகளைத் துரத்த வேண்டாம்,' தனியார் வேலைகள் எங்கே பாகவத் ஜி?" பிரதமர் நரேந்திர மோடியின் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.