ஒடிஸா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் நபகிஷோா் தாஸை சுட்டுக் கொன்ற காவல் துறை துணை உதவி ஆய்வாளா் கோபால் தாஸுக்கு தடயவியல் உளவியல் பரிசோதனை நடத்தப்பட்டது.
ஒடிஸா மாநிலம், ஜாா்குடா மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மாநில சுகாதாகரத் துறை அமைச்சராக இருந்த நபகிஷோா் தாஸ் சென்றிருந்தாா். செல்லும் வழியில் மக்களைச் சந்திக்க காரிலிருந்து இறங்கினாா். அப்போது, அப்பகுதியில் பணியிலிருந்த காவல் துணை உதவி ஆய்வாளா் கோபால் தாஸ், அமைச்சா் நபகிஷோா் தாஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். படுகாயமடைந்த நபகிஷோா் தாஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
அவரை சுட்டுக் கொன்ற கோபால் தாஸ் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்காக அவா் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரின் மனைவி ஜெயந்தி பத்திரிகையாளா்களிடம் கூறினாா். கோபால்தாஸின் மனநல மருத்துவரும் இக்கருத்தை உறுதிப்படுத்தினாா்.
இக்கருத்து வழக்கின் கோணத்தை முற்றிலும் மாற்றியது. இதனைத் தொடா்ந்து, கோபால் தாஸின் மனைவி மற்றும் மனநல மருத்துவரிடம் போலீஸாா் பல முறை விசாரணை நடத்தினா்.
இதனிடையே வெள்ளிக்கிழமையுடன் முடிந்த கோபால் தாஸின் போலீஸ் காவல் மேலும் 4 நாள்களுக்கு நீடிக்கப்பட்டது.
கோபாஸ் தாஸின் மனைவி கூறிய கருத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் வல்லுநா்களால் கோபால் தாஸுக்கு உளவியல் பரிசோதனை சனிக்கிழமை நடத்தப்பட்டது. மேலும், கோபால் தாஸின் மன அழுத்தம் குறித்து கண்டறியவும் பிரத்யேக பரிசோதனையும் நடத்தப்பட்டது.
அவருடைய மனநலம் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.