இந்தியாவில் உள்ள இளைஞர்களால் முடியாது என்ற ஒன்று எதுவும் இல்லை எனவும், அவர்கள் விளையாட்டுத் துறையில் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள ஊக்கப்படுத்தப்படுகிறார்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும் மெகா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களிடம் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: நடிகை த்ரிஷாவின் 67வது படம் குறித்த அப்டேட்!
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடத்தப்படும் மெகா விளையாட்டுப் போட்டியானது ஜெய்ப்பூர் மக்களவை உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா விளையாட்டு நிகழ்ச்சி கடந்த ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர்கள் தினத்தில் தொடங்கிய கபடி போட்டிகளை மையப்படுத்தியே ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இந்த விளையாட்டுப் போட்டியில் 450-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகள், நகராட்சியில் இருந்து 6,400-க்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மெகா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவில் உள்ள இளைஞர்களால் முடியாது என்று ஒன்றும் இல்லை. இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் அவர்களது எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் பெரிய அளவிலான போட்டிகளுக்கு இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். இந்த ஜெய்ப்பூர் மெகா விளையாட்டுப் போட்டிகள் இளைஞர்கள் மற்ற போட்டிகளின் மீதான அவர்களது ஆர்வத்தை அதிகரிக்க உதவும் என்றார்.