அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள தமிழகத்தின் 6 மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், தகுதியான மாணவா்கள் அந்த இடங்களில் சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீதமாக 800-க்கும் மேற்பட்ட இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை மத்திய மருத்துவக் கலந்தாய்வு குழு நிரப்பி வருகிறது. கலந்தாய்வுக்கு பிறகு மீதமாகும் இடங்களை மாநில அரசிடமே ஒப்படைப்பது வழக்கம்.
ஆனால், கடந்த ஆண்டில் அந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. இறுதி வரை அந்த இடங்கள் ஒப்படைக்கப்படாததால், கடந்த ஆண்டு தமிழகத்தில் 24-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகின. அதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அவை நிரப்பப்பட்டன.
இந்த சூழலில் நிகழாண்டிலும் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை, கரூா், அரியலூா் மருத்துவக் கல்லூரிகளில் 6 மருத்துவ இடங்கள் நிரம்பவில்லை. அதனை தமிழக அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. இந்நிலையில், இதுவரை அதற்கு ஒப்புதல் கிடைக்காததால், அந்த இடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.