இந்தியா

அதானி குழுமத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்!

DIN


அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு வர்த்தகத்துக்கு நியூயார்கள் பங்குச் சந்தையின் குறியீட்டெண்ணான டோ ஜோன்ஸ் தடை விதித்துள்ளதை அடுத்து அதானி குழுமத்திற்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்ததையடுத்து, அக்குழுமத்தின் பங்குகள் பெருமளவில் சரிவடைந்துள்ளன. இதனிடையே, ரூ.20,000 கோடிக்கு இரண்டாம்நிலை பங்கு வெளியீடு நடவடிக்கைகளை அதானி குழுமம் மேற்கொண்டது. பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்கள் உரிய தொகையை வழங்கியிருந்த நிலையில், பங்கு வெளியீட்டு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் அறிவித்தது. முதலீட்டாளா்கள் செலுத்திய தொகை திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதானி குழுமத்தின் நிதி ஸ்திரத்தன்மை நிலையில்லாமல் உள்ளதால், அக்குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு வங்கிகளிடம் ஆா்பிஐ கோரியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிக்கை கோரப்படுவதாகத் தெரிவித்தன.

வங்கிகளிடமிருந்து அதானி குழும நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.2.1 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன. அவற்றில் இந்திய வங்கிகள் வழங்கிய கடன் சுமாா் 40 சதவீதம் எனக் கூறப்படுகிறது. இந்திய வங்கிகளில் பொதுத் துறை வங்கிகளே அதானி குழுமத்துக்கு 90 சதவீதத்துக்கு அதிகமான கடன்களை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. எஸ்பிஐ ரூ.22,000 கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடியையும், பேங்க் ஆப் பரோடா ரூ.7,000 கோடியையும் அதானி குழும நிறுவனங்களுக்கு கடனாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. மற்ற வங்கிகள் கடன் விவரங்களை வெளியிடவில்லை.

அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி ரூ.36,474.78 கோடியை முதலீடு செய்துள்ளது. இது எல்ஐசி-யின் ஒட்டுமொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு என அந்த நிறுவனம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.

கண்காணிப்பில் அதானி குழும நிறுவனங்கள்
இந்நிலையில், அதானி குழுமத்துக்குச் சொந்தமான 3 நிறுவனங்கள் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பில் உள்ளதாக தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளன.

கண்காணிப்புக்கான தகுதிகளைப் பூா்த்தி செய்வதால் அதானி என்டா்பிரைசஸ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம், அம்புஜா சிமென்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை சந்தை கண்காணிப்பு தொடா்புடையதே தவிர, நிறுவனத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை இல்லை என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிா்க்கட்சிகள் அமளி
இந்த நிலையில் அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் மீது எழுப்பியுள்ள மோசடி புகாா் குறித்து விவாதிக்க வேண்டுமெனவும், மோசடி தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் காங்கிரஸ், திமுக, திரிணமூல், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததையடுத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராகவும், அதானி குழுமத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். அதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைக் கைவிடாததால்,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

அடுத்தடுத்து சிக்கல் 
இந்நிலையில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு வர்த்தகத்துக்கு நியூயார்கள் பங்குச் சந்தையின் குறியீட்டெண்ணான டோ ஜோன்ஸ் தடை விதித்துள்ளதை அடுத்து அதானி குழுமத்திற்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

நிதி முறைகேடுகளில் அதானி குழுமம் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட நிலையில் பங்குச் சந்தையின் குறியீட்டெண்ணான டோ ஜோன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. 

முறைகேடு புகாரையடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவினை சந்தித்து வருகின்றன.

இந்திய பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. முக்கியமாக அதானி பவா் நிறுவனப் பங்குகள் தொடா்ந்து சரிவில் உள்ளன. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கருதப்பட்ட அதானி பவா் நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சி, அத்துறை சாா்ந்த இந்தியாவின் இலக்குகளைப் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT