ஜம்மு-காஷ்மீரில் பனிபடர்ந்த குல்மார்க் மலைப் பகுதியில் புதன்கிழமை பனி சறுக்கு விளையாடச் சென்ற வெளிநாட்டு வீரர்கள் இருவர் பனிச்சரிவில் சிக்கி பலியாகினர்; 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த பனிச் சறுக்கு வீரர்கள் 21 பேர் மூன்று குழுக்களாகவும், அவர்களுடன் வழிகாட்டியாக உள்ளூர் நபர்கள் இரண்டு பேர் என 23 பேர் பனிபடர்ந்த குல்மார்க் மலைப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
கங்கோத்ரி மலைச் சரிவில் அவர்கள் நின்று கொண்டிருந்தபோது பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தில் வெளிநாட்டு வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அஃபர்வாட் சிகரத்தில் சிக்கியிருந்த மேலும் 19 வீரர்கள், 2 உள்ளூர் நபர்களும் பாரமுல்லா மாவட்ட காவல் துறையினரால் மீட்கப்பட்டனர்.
இந்த அஃபர்வாட் சிகரம் பனிச் சறுக்கு விளையாடும் வீரர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற பகுதியாகும். ஒவ்வொரு பனி காலத்தின்போதும் இங்கு பனி சறுக்கு விளையாட நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வர். மீட்கப்பட்ட நபர்கள் குல்மார்க் அருகே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
14, 000 அடி உயரமுள்ள அஃபர்வாட் சிகரத்தில் சிக்கியிருந்தவர்களை கேபிள் கார் மூலம் பத்திரமாக மீட்டோம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
பாரமுல்லா மாவட்ட காவல் துறை செய்தித் தொடர்பாளரும் இத்தகவலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பனிப் பாறை மோத வருவதும், அதைப் பார்த்து பயந்து வீரர்கள் ஓட்டம் பிடிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.