மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இன்று (பிப்.2) வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி பாஜக பேரவைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. மத்திய தேர்தல் குழு ஆலோசனையைத் தொடர்ந்து, தற்போது மேகாலயா தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
மேகாலயாவின் 60 பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் மேகாலயாவில் பாஜக தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
60 தொகுதிகளையுடைய நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது.
நாகாலாந்தின் மாநில பாஜக தலைவராக தெம்ஜென் இம்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அலோங்டாகி தொகுதியில் களமிறங்குகிறார்.