தில்லி துணைநிலை ஆளுநரின் குறுக்கீடுகளால் ஆசிரியர்களை தில்லி அரசினால் ஃபின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்ப முடியவில்லை என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
தலைநகர் தில்லி சட்டம் அவருக்கு இந்த குறுக்கீடுகள் செய்ய அதிகாரம் அளிப்பதாகவும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தில்லி துணை நிலை ஆளுநர் தில்லி அரசினை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: நான் தில்லியின் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை, தில்லி தலைநகர் சட்டத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசின் செயல்பாடுகளில் குறுக்கீடுகளை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மற்ற மாநிலங்களில் உள்ள கல்வித் துறை அமைச்சர்கள் தங்களது ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்ப சுதந்திரமாக முடிவு எடுக்கும்போது தில்லி கல்வித் துறை அமைச்சருக்கு மட்டும் அந்த உரிமை கிடையாதா? என்றார்.
முன்னதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாப் மாநிலத்திலிருந்து 36 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்காக நாளை மறுநாள் (பிப்ரவரி 4) சிங்கப்பூருக்கு செல்ல உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.