மார்காவோ: எட்டு மாதங்களுக்கு முன்பு, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது உடல் என அடையாளம் காணப்பட்டு, இறுதிச் சடங்குகளும் முடிந்த நிலையில், அந்த நபர் கோவாவில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீபக் பாலகிருஷ்ணா என்ற நபரை கோவாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் கேரள காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், எரிக்கப்பட்ட நபரின் உடல் இவருடையதல்ல என்பது தெரியவந்துள்ளது.
கேரளத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீபக் காணாமல் போயுள்ளார். ஜூலை மாதம் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தீபக்கின் உடல் கண்டு தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தீபக்கின் குடும்பத்தினரும் அந்த உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்துள்ளனர். பிறகுதான், இறுதிச் சடங்கு செய்யப்பட்ட அந்த உடல், வேறொருவரின் உடல் என்று காவல்துறையினருக்குத் தெரிய வந்தது.
மரபணு சோதனை செய்து, அதிலும் தவறுதலாக தீபக் உடல் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதும் காவல்துறைக்குத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தீபக் உயிரோடு இருக்கிறாரா? எங்கே இருக்கிறார் என்று காவல்துறையினர் தேடினர். அப்போது, பல மாநிலங்களிலும் உள்ள விடுதிகளில் தங்கும் விருந்தினர்களின் வருகைகளை காவல்துறையினர் பதிவு செய்து ஆய்வு செய்த போது, தீபக் தனது ஆதார் எண்ணைக் கொடுத்து விடுதியில் தங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக காவல்துறையினர் காவலில் எடுத்தனர்.
நாட்டின் பல இடங்களுக்குச் சுற்றித் திரிந்துவிட்டு தற்போது அவர் கோவா வந்திருந்ததாகக் கூறியுள்ளார். அவருக்கு ஏற்கனவே இறுதிச் சடங்குகளை குடும்பத்தினர் செய்து முடித்துவிட்ட தகவலை காவல்துறையினர் தீபக்கிடம் தெரிவித்துள்ளனர்.