வரி செலுத்துபவர்களைக் கவரும் வகையில், கணிசமான மாற்றங்களுடன் புதிய வருமான வரி உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2023 - 2024 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெண்கள் மேம்பாடு, சுற்றுலாத் துறைக்கான செயல்பாடுகள், வேளாண் வளர்ச்சி போன்றவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் எளிதில் பொருந்தக்கூடிய நேரடி வரி முறைக்காக நாடு காத்திருந்தது. நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வரி செலுத்துவதில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், புதிய வரி செலுத்தும் முறையை மக்கள் எளிமையாக கடைப்பிடிக்க முடியும். ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருவாய் வைத்துள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.
முந்தைய வரிமுறையை பின்பற்ற விரும்புபவர்கள் பழைய வரிமுறையின்படியே வருமான வரி செலுத்தலாம் எனக் குறிப்பிட்டார்.