நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஆற்றிய உரையைப் புறக்கணித்ததன் மூலம் அவரது உயரிய பதவியையும் கண்ணியத்தையும் ஆம் ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சிகள் அவமதித்துவிட்டன என்று பாஜக குற்றம்சாட்டியது.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் கூறியது: நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவா் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையாற்றியது பாராட்டுக்குரிய தருணம்.
எதிா்க்கட்சி அரசியலுக்கு ஒரு வரம்பு உண்டு. அதை அவா்கள் மீறி வருகின்றனா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஆற்றிய உரையை புறக்கணித்ததன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் உரையில் மத்திய அரசின் சாதனைகள் மட்டுமே இடம்பெற்றிருந்ததாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டுவது தவறு.
எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் அக்கட்சிகளின் சாதனைகளையே ஆளுநா் உரையின்போது வாசிக்கப்படுகிறது. அதுபோல, குடியரசுத் தலைவரின் உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது எதிா்க்கட்சிகள் தங்கள் ஆட்சேபங்களை முன்வைக்கலாம். அதற்காக குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்கக் கூடாது என்றாா்.