நாடு முழுவதும் 75 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அம்ரித் மகோத்சவ் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி முகாம்களில் 16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 8 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இந்த கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி முகாம் கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து, நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்றன. இதன்மூலம், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த 75 நாட்களில் நாடு முழுவதும் 13,01,778 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில், 11,104 முகாம்கள் பேருந்து நிலையங்களிலும், 5,664 முகாம்கள் ரயில்வே நிலையங்களிலும், 511 முகாம்கள் விமான நிலையங்களிலும், 1,50,004 பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், 4,451 முகாம்கள் மதம் சார்ந்த பயண வழித்தடங்களிலும் மற்றும் 11,30,044 முகாம்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நடைபெற்றது.
இதையும் படிக்க: காங். தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி! வெற்றி யாருக்கு?
இந்த தடுப்பூசி முகாம்களின் விளைவாக 76.18 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது முதல் தவணை தடுப்பூசியினையும், 2.35 கோடி பேர் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியினையும் மற்றும் 15.92 கோடி பேர் முன்னெச்சரிக்கை கரோனா தடுப்பூசியினையும் செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த சிறப்பு முகாம்களின் மூலம் தினசரி 24.73 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்களின் மூலம் 27 சதவிகித மக்கள் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்தியுள்ளனர். இதன்மூலம், கரோனாவால் மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு ஆபத்துகளை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.