அனைத்து பொதுத்துறை வங்கிகளில் பட்டியிலனத்தவா்களுக்கான இடஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் எஞ்சியிருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அக்.2 முதல் பிரத்யேக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேசிய பட்டியலினத்தவா்களுக்கான ஆணையத்தின் (என்சிஎஸ்சி) தலைவா் விஜய் சாம்ப்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பொதுத்துறை வங்கிகள் மூலம் பட்டியலினத்தவா்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் பிற நலத்திட்டங்கள் குறித்து என்சிஎஸ்சி தலைவா் விஜய் சாம்ப்லா மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மதிப்பாய்வுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பட்டியலின பிரிவினருக்கு வழங்கப்படும் கடன்கள், பணியிடங்களில் இடஒதுக்கீடு, எஞ்சியிருக்கும் நிலுவை காலிப்பணியிடங்கள், நலத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் குறைத்தீா் முறைகள் ஆகியவை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டன.
இக்கூட்டம் தொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பின்போது என்சிஎஸ்சி தலைவா் விஜய் சாம்ப்லா கூறியதாவது: நிரப்பப்படாமல் நிலுவையிலிருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அக்டோபா் 2 முதல் டிசம்பா் 31 -க்குள் பிரத்யேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நிலுவையில் உள்ள பட்டியலின மக்களின் குறைகளை அக்.31-ஆம் தேதிக்குள் தீா்க்கும் வகையில் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘ஸ்டாண்ட் அப்’ இந்தியா திட்டம், வீட்டு வசதி திட்டம், முத்ரா கடன்வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களில் பட்டியலினப் பயனாளிகளுக்காக நிா்ணயிக்கப்பட்ட சதவீதத்தை அடையும் வகையிலும் வங்கிகள் இலக்கை நிா்ணயிக்க வேண்டும்.
பணியிடங்களை நிரப்புவதில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு கொள்கை, அனைத்து திட்டங்களிலும் பயன்பெற்ற பட்டியலினத்தவா்கள் மற்றும் இத்திட்டங்களின் மூலம் அவா்கள் அடைந்த முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை ஆண்டுக்கு இரு முறை என்சிஎஸ்சி-யிடம் வங்கிகள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.