காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதி வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன்(செப். 30) முடிவடைகிறது.
திரிபாதி ஏஐசிசி தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை வழங்கினார்.
திரிபாதியைத் தவிர, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரும் தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் முதல்வர், அந்த மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதேபோன்று எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவு தெரிவித்து திக்விஜய் சிங்கும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
காங்கிரஸுடன் இணைந்த இந்தியத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தேசியத் தலைவராக திரிபாதி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.