காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், கே.என். திரிபாதி ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன்(செப். 30) முடிந்தது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதுபோல ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என். திரிபாதி என்பவரும் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
மேலும் மல்லிகார்ஜுன கார்கேவும் போட்டியிடுவதாக அறிவித்து இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிக்க | காங். தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே போட்டி; திக்விஜய் சிங் விலகல்!
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் முதல்வர், அந்த மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதுபோல, மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவு தெரிவித்து திக்விஜய் சிங்கும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், கே.என். திரிபாதி ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதில் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தலைவர் பதவியில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை சோனியா காந்திதான் போட்டியிடக் கூறியதாகத் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில் சசி தரூருக்கும் கட்சியில் ஆதரவு அதிகம் உள்ளது. இதனால் இவர்கள் இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 9,000க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அக். 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராகும் முடிவில் இருப்பதால் ராகுல் காந்தி தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.