காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன்(செப். 30) முடிவடைகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் முதல்வர், அந்த மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினார் கெலாட்
இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகிய இருவரும் களத்தில் இருந்த நிலையில் திக்விஜய் சிங் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதால் அவர் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
'நேற்று மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்தேன். கார்கே போட்டியிட்டால் நான் விலகுவேன் என்று கூறினேன். அவர் எனக்கு மூத்தவர். அவரை எதிர்த்து போட்டியிடுவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
நான் என் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸுக்காக உழைத்தேன். தொடர்ந்து செய்வேன். தலித் உரிமைகள், வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் கட்சித் தலைமையின் மீதான நம்பிக்கை ஆகிய மூன்று விஷயங்களில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது' என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட உள்ளதாக பிரமோத் திவாரி கூறியுள்ளார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நாளை சசி தரூர் வேட்புமனு தாக்கல்