லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அயோத்தியின் முக்கிய சந்திப்பில் 40 அடி நீளமுள்ள வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்தியாவின் இசைக்குயில் என்றிழைக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரின் 93வது பிறந்தநாளையொட்டி, அவரின் நினைவாக 7.9 கோடி மதிப்பீட்டில் சரயு நதிக்கரையின் குறுக்கில், அயோத்தியின் முக்கிய சந்திப்பில் 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் இணைந்து லதா மங்கேஷ்கர் சவுக்கையும் திறந்து வைத்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரை பக்கத்தில்,
மறைந்த சகோதரி லாத மங்கேஷ்கரை அவரின் பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். எண்ணற்ற முறை அவரிடம் உரையாடியுள்ளேன். அப்போது அவர் மிகவும் பாசத்தைப் பொழிவார்.
இன்று அயோத்தியில் உள்ள ஒரு சாலை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் சிறந்த அடையாள சின்னங்களில் ஒருவரான அவருக்கும் செலுத்தும் சரியான அஞ்சலி என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் சத்யேந்திர சிங் கூறுகையில்,
இந்த மாபெரும் வீணையை பத்மஸ்ரீ விருது பெற்ற ராம் சுதார் இரண்டு மாதங்கள் தயாரித்துள்ளார். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த வீணையில் இசையின் தெய்வமான சரஸ்வதி தேவியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.