உத்தரப் பிரதேசத்தில் தனியார் பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீதம் பால் சிங் கூறுகையில்,
தனியார் பேருந்து தௌர்ஹாராவிலிருந்து லக்னௌ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை எண் 730இல் உள்ள அய்ரா பாலத்தில், எதிர்த் திசையில் வந்த மினி லாரி மீது மோதியது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றார் அவர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேருந்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
லக்னௌவில் உள்ள மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
இந்த விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,
இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.