ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் நேரில் ஆஜராகுமாறு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்திய ரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலா கழகத்தின்(ஐஆர்சிடிசி) ஊழல் வழக்கில் பிகார் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தரப்பு வழக்குரைஞருக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்தும், ஆர்ஜேடி தலைவர் அக்டோபர் 18ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சிறப்பு நீதிபதி(சிபிஐ) கீதாஞ்சலி கோயல் உத்தரவிட்டார்.
முன்னதாக, செப்டம்பர் 17ஆம் தேதி, விசாரணை நிறுவனம் முன்வைத்த விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியது மற்றும் அவரது பதிலைக் கோரியது.
இரண்டு ஐஆர்சிடிசி உணவகங்களைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் லாலுவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், லாலுவின் மனைவி ரப்ரிதேவி உள்பட 12 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு 2018ல் ஜாமீன் வழுக்கப்பட்டது. ஜாமீன் நிபந்தனைகளை மீறி தேஜஸ்வி செயல்பட்டு வருவதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அதன்படி, ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் நேரில் ஆஜராகுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.