ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார். தாங்கள் தலைவராகப் போவதில்லை என சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் உறுதியுடன் இருக்கின்றனர்.
இதனால் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு அசோக் கெலாட், சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதாக அசோக் கெலாட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கெலாட் vs பைலட்: ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? காங்கிரஸுக்குப் பின்னடைவா?
இந்நிலையில், தற்போது, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதால் கட்சியின் விதியான 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகக்கூடும் என்று தெரிகிறது. இதனால் முதல்வராக சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், கெலாட் ஆதரவாளர்கள் சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
ஜெய்ப்பூர் அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பொதுச் செயலாளர் அஜய் மேகனும், கெலாட், சச்சின் பைலட் ஆகியோரிடம் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு அதுகுறித்த அறிக்கையையும் சோனியா காந்தியுடன் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் அரசியல் சூழ்நிலையை சமாளிக்க காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலக்கப்படலாம் என்று தெரிகிறது. அதாவது அசோக் கெலாட்டை முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்கவைக்க முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கெலாட்டே முதல்வா் பதவியில் தொடர வேண்டும் அல்லது ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக்க வேண்டும் அல்லது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கெலாட் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கெலாட் தூண்டிவிடாமல் ஆவது ஆதரவு எம்எல்ஏக்கள் இவ்வாறு சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களின் செயல் 'ஒழுங்கீனம்' என்றும் கார்கே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.