ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் எடுத்துக் கொண்ட பிறகு, ரீ-ஃபண்ட் செய்யும் நடைமுறையை விரைவுப்படுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில், நிலுவையில் இருந்துவந்த 2.5 லட்சம் வழக்குகளில் இதுவரை ரீ-ஃபண்ட் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக ஏர் இந்தியா நிறுவனம் செலவிட்ட தொகை ரூ.150 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மற்ற அனைத்து விமான சேவை நிறுவனங்களைப் போலவே ஏர் இந்தியாவும் கரோனா பேரிடர் காலத்தில் மிக மோசமான விளைவை எதிர்கொண்டது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும், ஏற்கனவே இருக்கும் சில சிக்கல்களை சரிசெய்யவும் ஏர் இந்தியா நிறுவனம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதுபோல ரீ-ஃபண்ட் நடவடிக்கைகளையும் ஏர் இந்தியா முன்னுரிமை கொடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், தகுதி வாய்ந்த ரீ-ஃபண்ட் நிலுவைகள் குறித்து ஏர் இந்தியா இணைய தளத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு 2-3 நாள்களில் தீர்வு காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.