ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதால் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற கட்சியின் முடிவின்படி, அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில முதல்வராவார் என்றும் கூறப்படுகிறது.
ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக சச்சின் பைலட் விரைவில் பொறுப்பேற்பாா் என அந்த மாநில அமைச்சா் ராஜேந்திர கெளடா கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சச்சின் பைலட் முதல்வரானால் 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ராஜஸ்தானில் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய சச்சின் பைலட், 'நான் இப்போது ஜெய்ப்பூரில்தான் இருக்கிறேன், தில்லிக்கு செல்லவில்லை. கட்சித் தலைமை முதலில் இதுகுறித்து முடிவெடுக்கட்டும். அதன்பிறகு நான் தில்லி செல்கிறேன்' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மேகனும், 'எத்தனை பேர் ராஜிநாமா செய்வதாகக் கூறினார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைமை இதுகுறித்து முடிவெடுக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | சச்சின் பைலட்டுக்கு முதல்வா் பதவி கூடாது: 80 ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு