2017ஆம் ஆண்டுக்கு முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஜீன்களிலேயே ஊழல் என்பது உள்ளது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கலவரத்தில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு கையாளப்படுகிறார்களோ அதே நிலைதான் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (செப்டம்பர் 9) தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க: ராகுல்காந்தியின் ஆடை குறித்து விமர்சனம்: பாஜகவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது: “ உத்தரப் பிரதேசத்தில் முந்தைய அரசுகள் பொறுப்பின்றி செயல்பட்டன. அதற்கான விலையை உத்தரப் பிரதேச மக்கள் கொடுக்க வேண்டியிருந்தது. 2017ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஆட்சியில் இருந்த அரசுகளின் ஜீன்களிலேயே ஊழல் இருக்கிறது. முந்தைய அரசுகள் உருவாக்கியத் திட்டங்கள் அனைத்தும் அவர்களது சொந்த நலனுக்காக உதவி செய்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது. 2007 முதல் 2012 வரை மயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜவாதி ஆட்சியில் இருந்தது. 2012 முதல் 2017 வரை சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்தது. இன்று உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஒருவர் வேறு ஒரு மாநிலத்திற்கு சென்றால் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை கிடையாது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் இளைஞர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. அவர்களது அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் கொடுமையான நிலையே இருந்தது.
இதையும் படிக்க: 71-வது சதம்: கோலி நிகழ்த்திய புதிய சாதனைகள்
உத்தரப் பிரதேச அரசு குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் ஆகிய இரண்டினையும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இந்த அரசு நாட்டில் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. மக்கள் உத்தரப் பிரதேச மாடல் ஆட்சியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இங்கு குற்றங்களுக்கும் இடமில்லை. குற்றவாளிகளுக்கும் இடமில்லை. தற்போது உத்தரப் பிரதேசம் கலவரங்கள் இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது. உத்தரப் பிரதேசத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நாட்டிற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. கலவரங்களில் ஈடுபடுபவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துகளை அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஊழலில் ஈடுபடுபவர்களுக்கும் இதே நிலை உருவாகும். ஊழலால் சேர்த்த சொத்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.” என்றார்.