இந்தியா

'கார்கேவிடம் கேளுங்கள்' - தேர்தல் முடிவை முன்பே அறிவித்த ராகுல் காந்தி!

19th Oct 2022 04:27 PM

ADVERTISEMENT

 

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே கட்சியின் தலைவர் கார்கே என்று ராகுல் காந்தி கூறியது பேசுபொருளாகியுள்ளது. 

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் கட்சியின் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள்(96%) பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதையடுத்து தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. தேர்தலில், மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளரான சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றிருப்பதாகவும் 416 வாக்குகள் செல்லாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி!

இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கட்சியின் தலைவர் கார்கே என்பதை ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறினார். 

ஆந்திரத்தில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அடோனியில் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது கட்சியில் உங்களுக்கு என்ன பதவி என்று ராகுலிடம் செய்தியாளர் கேட்க, அதற்கு ராகுல், 'கட்சியில் எனக்கு என்ன பதவி என்பதை கார்கே மற்றும் சோனியா காந்தியிடம் கேளுங்கள்' என்று பதில் அளித்தார். என்னுடைய பணி என்ன என்பதை கட்சித் தலைவர் தான் முடிவு செய்வார்' என்று கூறியுள்ளார். 

ராகுலின் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. கார்கே முன்னிலையில் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே ராகுல் காந்தி முடிவைக் கூறியது பேசுபொருளாகியுள்ளது. 

இதையும் படிக்க | பாஜக மற்றும் மாநிலக் கட்சிகளிடம் ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை? - ராகுல் காந்தி

 

ADVERTISEMENT
ADVERTISEMENT