இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதற்காக தடுத்து நிறுத்தப்பட்ட இளைஞர் அவரை அடித்து இழுத்துச் சென்ற விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் புதன்கிழமை சண்டிகர் மாநில பதிவு எண் கொண்ட காரை இளைஞர் ஒருவர் அதிவேகமாக இயக்கியுள்ளார். இதனால் இளைஞரின் கார் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை போக்குவரத்து காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காரிலிருந்து இறங்கி தன்னை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கியுள்ளார். காவலரின் சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து வந்த இளைஞர் அவரது சட்டையை கிழித்துள்ளார். இதனை சுற்றியிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.
இந்நிலையில் இந்த காட்சிகள் அடங்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து அம்பாலா காவல்துறை அந்த இளைஞரை கைது செய்தது. விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் லாவிஸ் என்பதும் அவர் பத்திண்டாவில் வசித்து வருகிறார் என்பதும், அம்பாலாவில் உள்ள தனது குடும்பத்தினரை அவர் பார்க்கச் சென்றதும் தெரிய வந்தது. லாவிஸ் மனநல சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றிய விவகாரம்: கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்
எனினும் அந்த இளைஞர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், அரசு ஊழியரைத் தாக்கியது, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.