உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள திரெளபதி மலையின் சிகரத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவில், மலையேற்றப் பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் உள்பட 61 போ் சிக்கினா். இதில் 4 உடல்கள் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மேலும் 12 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.
மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 61 பேரில் 30 போ் பாதுகாப்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டது. 27 பேரது நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. இப்போது வரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 11 போ் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனா்.
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் என 61 போ் அடங்கிய குழு ஒன்று, அந்த மாவட்டத்தில் உள்ள திரெளபதி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.
திரௌபதி கா தண்டா-2 சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக்கொண்டிருந்த இக்குழுவினா் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனா்.
மாநில பேரிடா் மீட்புத் துறையின் 5 வீரா்களும் மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தின் 3 பயிற்றுநா்களும் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா். விமானப் படையின் ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.