முதியோருக்கான நலத்திட்ட உதவிகள் தொடா்பான விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
முன்னாள் மத்திய சட்ட அமைச்சா் அஷ்வினி குமாா் சாா்பில் உச்சநீதின்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நாட்டில் முதியோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவா்களில் பலா் மிகுந்த ஏழ்மை நிலையில், உணவு, உடை இன்றி வாழ்ந்து வரும் நிலை உள்ளது. எனவே, நாடு முழுவதும் அடிப்படை மருத்துவ வசிதிகளுடன் கூடிய முதியோா் இல்லங்கள் அமைப்பதற்கு உத்தரவிட வேண்டும். ‘பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் 2007’ சட்டம் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட முதியோா் நலத் திட்டங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதியோா் இல்லங்கள், முதியோா் பரமரிப்பு நிலை குறித்த விவரங்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசு வழக்குரைஞரிடம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை மத்திய அரசு சேகரித்த பிறகு, அதுதொடா்பான நிலை அறிக்கையை அடுத்த ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மாநிலங்களில் பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்த விவரங்களும் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.