பிரதமர் நரேந்திர மோடி அரசின் தலைவராக பதவியேற்று 21 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாஜக தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த ஆண்டுகள் உட்பட இன்று வரை 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து, பாஜக தலைவர்கள் பலரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது தன்னலமற்ற சேவையை நாட்டுக்காக வழங்கி வருவதாக அவர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜென்டில்மேன் 2' படத்தின் கதாநாயகன் யார்? - அதிகாரப்பூர்வ தகவல்
மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேசத்திற்கான தன்னலமற்ற சேவையைத் தொடங்கினார். கடந்த 2001ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து ஆட்சி முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து நாட்டினை வலிமையாக கட்டமைத்துள்ளார். மேலும் அதிக தன்னம்பிக்கை மிக்க இந்தியாவை அவர் உருவாக்கியுள்ளார்.” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: “ பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது தலைமையிலான அரசின் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளது. 21 ஆண்டுகளாக சிறந்த தொலைநோக்குப் பார்வையுடன் அவர் செயல்பட்டு வருகிறார்.” என்றார்.