ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த நெல்லிக்குப்பம் மோட்டூர் அருகே சென்னை-சித்தூர் செல்லும் சாலையில் சாலையில் செல்லும் வாகனங்களை முந்தி செல்ல அதிவேகமாக சென்றபோது லோடு ஆட்டோவில் மோதி இரண்டு பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிப்காட் அடுத்த நெல்லிக்குப்பம் அருகே சென்னை-சித்தூர் செல்லும் சாலையில் ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ராணிப்பேட்டை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் பைக் ரேஸ் ஓட்டுவது போல ஒவ்வொரு வாகனத்தையும் முந்தி சென்றதாக கூறப்படுகிறது.
சரியாக நெல்லிக்குப்பம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லோடு ஆட்டோவை முந்த முயன்றபோது ஆட்டோவின் பின்புறம் மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.